திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள தையொட்டி,  கோயில் வலைதளமான www.arunachaleswarrtemple.tnhrce.in மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல்  அதில் கேட்கும் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.



கார்த்திகை தீபத் திருவிழாவானது வருகிற 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கோவிலுக்குள் சென்று சாமி  தரிசனம் செய்திட  ஒருநாளைக்கு சுமார் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.

இதில்  59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முகக்கவசத்துடன் ஆதார் அட்டை நகலுடன் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலைகளைத் தொட அனுமதியில்லை. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சாமியை தாிசிக்கலாம்.

 
Top